Pasumai Media

திருவள்ளூர் மாவட்டம் சுண்ணாம்புக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் வடக்கு மாவட்டத் தலைவர் எஸ்.வி இரவி உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

சுண்ணாம்புக்குளம் இரவி அவரது இளம் வயதிலிருந்தே வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டு அவற்றின் வளர்ச்சிக்காக பாடுபட்டு வந்தவர். வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கக் கோரி 1986-ஆம் ஆண்டு திசம்பர் மாதம் தமிழ்நாடு முழுவதும் தொடர் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது கும்மிடிப்பூண்டி சந்திப்பில் நடைபெற்ற மறியலால் 4 மணி நேரத்திற்கும் மேலாக வடமாநிலங்களுக்கு செல்ல வேண்டிய தொடவண்டிகள் இயங்கவில்லை. இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த அந்தப் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர். 1987-ஆம் ஆண்டு ஒரு வார தொடர் சாலைமறியல் போராட்டம் உள்ளிட்ட அனைத்துப் போராட்டங்களிலும் பங்கேற்று சிறை சென்ற தியாகி அவர்.

கட்சிப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்பதற்காக கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாதவர். மருத்துவர் அய்யா அவர்கள் மீது பக்தி கொண்டவர். என் மீது உயிரையே வைத்திருந்தவர். தருமபுரி தொகுதியில் நான் போட்டியிட்ட போதெல்லாம் அங்கேயே முகாமிட்டு எனக்காக தேர்தல் பணியாற்றியவர். அண்மையில் கும்மிடிப்பூண்டி நகரில் தமிழக மக்கள் உரிமைப் பயணம் மேற்கொண்ட போது கூட என்னை சந்தித்துப் பேசினார். அப்படிப்பட்டவர் இப்போது நம்முடன் இல்லை என்பதை ஏற்க மனம் மறுக்கிறது.

சுண்ணாம்புக்குளம் எஸ்.வி ரவி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், பாட்டாளி மக்கள் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

- மருத்துவர் அன்புமணி ராமதாஸ்

4 weeks ago | [YT] | 66