தமிழர்குடிகள் TamilarKudigal

மே' பதினேழு (2024)
---------------------

'மே' பதினேழு வருகிற போது,
பிணங்களும், இனங்களும் மூச்சுவிடும்.
பாலச் சந்திரன் இசைபிரியா போல்;
பலபேர் உடல்கள் மீட்சிபெறும்.

தேசிய தலைவர் எங்கே! என்ற,
பேச்சுக்கள் இன்றும் காதில்விழும்.
வருவார், வருவார் பொருங்கள் என்ற,
வஞ்சக வார்த்தை கூடவரும்.

போர்க்கள முனையில் புலிகள் முன்னேற,
பூரித்த தலைவர்கள் மாண்டனரோ?
சமர்க்களம் இறுதிச் சாவினை தழுவ -இந்த,
சாக்கடை எங்கே போயினரோ?

அரசியல் சூதில் ஆட்டம் போடும் ,
அசிங்கங்கமே! நீங்கள் தலைவர்களா?
இனப்பகை போரின் இறுதியில் நீங்கள்,
எதிரியின் கைக்குள் இருந்தீர்களா?

போர்முடிந் தின்று பதினைந் தாண்டு,
போனபின் தானே புரிகிறது.
மத்திய, மாநில உளவுத் துறையின்
மடிக்குள் இருந்தது தெரிகிறது.

தமிழர் தேசியம் பேசிய தலைகள்,
திராவிடத் திற்குள் ஒளிகிறது.
திராவிடம், தேசியம் ஒன்று சேர்ந்துதான்;
முள்ளி வாய்க்காலில் முடிக்கிறது.

உங்களை விடவே சிங்களன் மேலடா!
ஒவ்வொரு தலைவரும் துரோகிகளா ?
ஈழத் தமிழர் இந்திய அடிமை;
இதுதான் உங்கள் நோக்கங்களா ?

அடுத்தொரு தலைமையை தடுத்தது இந்தியா!
அதுதான் இதுவரை நடக்கிறது .
ஈழத்தைப் பெற்று இந்தியா தருமென்ற;
துரோகத்தின் வார்த்தையும் ஒலிக்கிறது.

ஆரிய, திராவிட இனப்பகை தமிழினம்,
அடிப்படை இதுதான் உணர்ந்துவிடு. இனப்பகை துணையுடன் இனியொரு விடுதலை;
பெறுவோம் என்பதை மறந்துவிடு.

- விடுதலைப் பாவலர் [வில்லாளன்]

1 year ago | [YT] | 33