Prabanja olzikeetru பிரபஞ்ச ஒளிக்கீற்று

Its all about law of attraction , Meditation, Yoga ,Tamil motivation


Prabanja olzikeetru பிரபஞ்ச ஒளிக்கீற்று

#மாபெரும்_வெற்றிக்கான_இரகசியம்...

நாம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்கிற ஆசை அனைவருக்கும் இருக்கும். ஆனால் அது பலராலும் முடிவது இல்லை, சிலரால் மட்டுமே அது சாத்தியம் ஆகிறது. அதற்கான காரணம் என்ன தெரியுமா? நாம் மிகப்பெரிய வெற்றிபெற வேண்டும் என்று ஆசைப்படுகிறோம் ஆனால் நம்மை நாம் முழுமையாக நம்புவது இல்லை. நம்மை நாமே நம்பவில்லை என்றால் நம்மால் எப்படி வெற்றிபெற முடியும்?

நம்மை நாம் ஏன் முழுமையாக நம்புவதில்லை? இதற்கான இரண்டு மிகமுக்கியமான காரணங்கள் மற்றும் அதற்கான தீர்வுகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. பொழுதுபோக்கு

நாம் நம்முடைய பொழுதைக் போக்குவதில் தான் அதிக நேரத்தை செலவிடுகிறோம். தொலைக்காட்சி, திரைப்படங்கள், தொடுபேசி போன்ற பல வழிகளில் நாம் பொழுதைப் போக்குகிறோம்.
நாம் பொழுதைப் போக்கும் அந்த நேரங்கள் அனைத்தும் நம்முடைய வெற்றியைப் பாதிக்கிறது. அந்த நேரங்களில் நம்மைப் பற்றியும், நம்முடைய வெற்றியைப் பற்றியும் நாம் சிந்திப்பது இல்லாமல் போகிறது மற்றும் பொழுதைப் போக்குவது எப்படி என்பவை தான் நம்முள் அதிகமாகப் பதிவாகிறது.

அது தினமும் தொடர்ந்துகொண்டே இருப்பதால் நம்மைப் பற்றியும், நம்முடைய அடுத்தகட்ட வளர்ச்சி பற்றியும் நாம் சிந்திப்பது மிகவும் குறைந்து விடுகிறது. பொழுது போக்குவதில் அதிக அனுபவம் பெற்று விடுகிறோம் அதன்பிறகு, நமது தகுதிகள் எப்படி வளரும்? நம்மால் எப்படி பெரிதாக வெற்றிபெற முடியும்? அப்போது நாம் நம்முடைய பொழுதை போக்குவதில் தானே நாம் திறமையானவர்களாக இருப்போம்?

"நாம் பொழுது போக்கும் ஒவ்வொரு நொடியும் நமக்கு வீண் தான் மாறாக,
நம் தகுதியை வளர்த்துக் கொள்ளும் ஒவ்வொரு நொடியும் தான் நமக்கு வெற்றி."

இதைப் புரிந்து கொள்ளாதவர்கள் தான் எனக்கு நேரமே சரியில்லை என்று புலம்புவார்கள். உண்மையில் அனைவருக்கும் நேரம் சரியாகத் தான் உள்ளது ஆனால் நாம் தான் நேரத்தை தவறாகப் பயன்படுத்தி வருகிறோம்.

2. பொறாமை

நாம் பிறர்மீது பொறாமை கொள்வதுதான் நம்முடைய வெற்றிக்கான மிகப்பெரிய தடை. ஏனென்றால், நம்மீது நமக்கே நம்பிக்கை இல்லாமல் போகும் பொழுதுதான் நமக்கு பொறாமை வருகிறது. என்னால் இது முடியவில்லையே இவனால் எப்படி முடிந்தது? நாம் ஏன் இவர் போல அழகாக இல்லை? இது போன்ற வீடு, மகிழுந்தை நம்மால் ஏன் வாங்க முடியவில்லை? இவர்களைப் போல நம்மால் ஏன் பேச முடிவதில்லை? இதுபோன்ற பல பொறாமைகள் நம்மிடம் இருந்து வெளிப்படுகிறது. அடிப்படையில் இந்த பொறாமைகள் நம்முடைய தாழ்வு மனப்பான்மையின் இன்னொரு வடிவம் தான் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

"அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்."

பொறாமை, பேராசை, அதிகமான கோபம், கடுமையான சொல் இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் வாழ்வதுவே அறம் என்கிறார் வள்ளுவர்.

ஒருவர் மீது நாம் பொறாமை கொள்வது அறம் இல்லை என்கிறார் வள்ளுவர். அந்த அளவிற்கு பொறாமை தவறானது. அது அறத்திற்கு புறம்பானது. நாம் ஏன் பொறாமைப் படுகிறோம்? பொறாமைப் படாமல் நம்மால் வாழ முடியுமா? என்கிற கேள்விகளை சிந்தித்துப் பாருங்கள்.

நிச்சயமாக நம்மால் பொறாமை இல்லாமல் வாழ முடியும். அதற்கு முதலில் நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டியது. ஊடகங்கள் காட்டும் திறமைகள் வேறு நம்முடைய உண்மையான திறமைகள் என்பது வேறு என்பதை தெள்ளத் தெளிவாக நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு கதை நாயகனால் 100 நபர்களிடம் சண்டையிட முடிகிறது ஆனால் உண்மையில் அது சாத்தியமே இல்லை. அவர்கள் தங்கள் நாடகம் அல்லது திரைப்படம் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக கதை நாயகன் மற்றும் நாயகியை வெள்ளை நிறத்தில் தேர்வு செய்கின்றனர் அது மட்டுமல்லாமல் பல மணி நேரம் ஒப்பனைகள் செய்து அதை விலையுயர்ந்த காமிராக்களால் காட்சிகளை எடுக்கிறார்கள். அதுபோல உண்மையில் நம்மால் எப்படி இருக்க முடியும்? அது சாத்தியமே இல்லையே?

சாத்தியம் இல்லை என்று தெரிந்தாலும் நாம் அப்படித்தான் வாழ விரும்புகிறோம். அதனால் தான் நம்மால் அது முடியாமலேயே போய்விடுகிறது. கற்பனையை உண்மையாக மாற்ற முயற்சி செய்கிறோம் அது நம்மால் முடியாமல் போகிறது அதனால், அதை நினைத்து வருத்தம் கொள்கிறோம், அந்த வருத்தம் தாழ்வு மனப்பான்மையாக மாறத் தொடங்குகிறது அது நாளடைவில் பொறாமையாக மாற்றம் பெற்று நம்மை மிகவும் வருத்துகிறது.

ஊடகங்களின் காட்சிகள் மற்றும் கற்பனைகளை நம்மால் உண்மையாக மாற்ற முடியாமல் போவதால் தான், அவற்றையே நமது இயலாமைக்கு தற்காலிக மருந்தாக மாற்றி விடுகிறோம். நாமும் அவற்றையே தொடந்து பார்த்து அதில் வரும் நபர்களை நாமாகவே கற்பனை செய்துகொண்டு வாழப் பழகிக் கொள்கிறோம்.

இதையெல்லாம் நம்மால் சரிசெய்ய முடியுமா? எப்படி முடியும்? தீர்வுகள் இதோ,

👍 கற்பனையில் வாழ்ந்தது போதும் உண்மையான வாழ்க்கையை வாழத் தொடங்குங்கள்.

👍 பொழுதைப் போக்குவதை எல்லாம் நிறுத்திக் கொள்ளுங்கள். நமது வெற்றிக்காக மற்றும் வளர்ச்சிக்காக அதிகமான நேரங்களை செலவு செய்யுங்கள்.

👍 நமக்காக நமது நேரங்களை செலவு செய்யும் சூழலை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

👍 பிறரைப்போல வாழ எண்ணாதீர்கள் இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் ஒரு தனித்திறமை உண்டு. உங்கள் திறமையைக் கண்டறிந்து அதை வளர்த்துக்கொண்டு முன்னேறுங்கள்.

👍 யாரைப் போலவும் நம்மால் வாழ முடியாது அப்படி வாழ முயற்சி செய்யாதீர்கள். அப்போதுதான் நம்முடைய வாழ்க்கையை நம்மால் வாழ முடியும்.

👍 அழகு என்பது வண்ணங்களில் இல்லை நம்முடைய நல்ல எண்ணங்களில் தான் உள்ளது என்பதை நம்புங்கள்.

👍 பிறரைப் பற்றி தவறாக பேசுவது, தவறாக எண்ணுவது அனைத்துமே நம்முடைய வாழ்க்கையின், வெற்றின் தடைகள் என்பதை உணருங்கள்.

👍 உங்களைப்பற்றி அதிகம் சிந்தியுங்கள். உங்கள் வளர்ச்சி, திறமை, தகுதி போன்றவற்றை அதிகம் சிந்தித்து அதை செயல்படுத்துங்கள்.

👍 இவற்றை ஒவ்வொரு நாளும் எவ்வளவு நேரம் நாம் பயன்படுத்துகிறோமோ அதுதான் நாம் மகிழ்ச்சியாக வாழவும், மாபெரும் வெற்றி பெறவும் நமக்கு உதவியாக அமைகிறது.

இவற்றைப் புரிந்துகொண்டு பயன்படுத்தி, செயல்படுத்தி அனைவரும் மாபெரும் வெற்றியைப் பெற்று மகிழ்ச்சியாக வாழ எனது அன்பும், வாழ்த்துக்களும்...

☔☔☔☔☔☔☔

4 years ago | [YT] | 1