♾❤️


Aviraa World

இளமையில் மரணம் -
வாழ நினைத்த நாட்களையும்,

முதுமையில் மரணம் -
வாழ்ந்த காலங்களையும் நினைத்துக்

கண்ணீருக்குக் காரணமாகிறது… !!!

1 year ago | [YT] | 6

Aviraa World

அன்பு அழ வைக்கிறது…
ஆம் இப்போதெல்லாம் அனைத்தையும் கடந்து விட முடிகிறது அன்பைத் தவிர
அன்பில் தான் மனம் அதிகம் வலிக்கிறது
காரணமே இன்றி கண்களில் கண்ணீர் வடிகிறது
அன்பைத் தாங்கும் சக்தி எவ்வாறு இதயத்திற்கு இல்லாமல் போனது… (?)

இதயத்தின் துடிப்பு அன்பில் மட்டுமே அதிகரிக்கிறது
இயக்கமின்றி இறுகச் செய்துவிடுகிறது - பல வேளைகளில் இயங்குவதற்கு ஒற்றைக் காரணமாகிறது…
கடந்து செல்லும் காணொளிகளில் கூட அன்பைக் கண்டால் கனக்கிறது மனம்
மலை மேல் விழுந்த ஒற்றை பூவிதழால் ஏற்பட்ட பூகம்பம் போல் தள்ளாடுகிறது…
அன்பின் முழுமை என்பது மொழியில்லா ஜீவன்களின் மொழியாகிறது…
மொழியின்றி பேசும் அன்பில் உலகின் அத்தனை மொழிகளும் ஊமையாகிப் போகின்றது…
‘பாஷைகள்’ இல்லா அன்பின் ஏக்கத்தை உணரும் போதெல்லாம் தவிக்கிறது நெஞ்சம்…
அன்பின் கனம் தொண்டைக்குழிக்குள்ளேயே தொலைந்து போகிறது
தொலைந்து போன பின்பும் ஏனோ திணறடிக்கச் செய்கிறது…
எவ்வுயிரின் வேதனையும் என்னுயிரில் வலிக்கிறது…
அன்பின் பிரிவும், அன்பின் சேர்க்கையும் உயிரின் ஆழத்தை உலுக்குகிறது…
எப்போதும் அன்பை பிரியாதீர்; பிரிக்காதீர்…
அன்பின் செயலற்ற நிலையில் உலகில்(ன்) அத்தனையும் அர்த்தமற்றுப் போகிறது…

கிடைக்காத அன்பைக் காணும் போதெல்லாம் மனம் புன்னகைத்து அழுகிறது…
அன்பின் அழுகைக்கு மட்டும் அர்த்தம் புரியவில்லை
கண்ணீரின் காரணமும் விளங்கவில்லை
மகிழ்கிறதா வலிக்கிறதா மனம் தெளிவாகத் தெரியவில்லை…

அன்பு பலவீனமாக்குகிறதா(?) அறியமுடியவில்லை
ஒருவேளை
வலியில் சிரிக்கும் உதடுகளும்
அன்பில் நனையும் கண்களும் உலகில் பலமானவையோ…!!!(?)

❤️

2 years ago | [YT] | 9

Aviraa World

நீ வகுத்த பாதையில்
தொடர்கிறது என் பயணம்…
தடுமாறினாலும்
தடம் மாறுவதில்லை
கால்கள்…
‘கசக்கிறது’ வாழ்க்கை;
‘மருந்தாகிறது’ ஜென்மம்…
வலிக்க வலிக்க ‘அறுத்தாலும்’
பந்தம் அறுக்கும்
உன் பரிவிற்கு
மீண்டும் ஒருமுறை நன்றி… 🙏

2 years ago | [YT] | 9

Aviraa World

கேட்போமா…

எப்போதும் கேள்விகளை மட்டுமல்ல;
இன்னொருவர் கதைக்கும் போது செவி கொடுத்துக் கேட்போமா….

மனம் திறந்து பேசும் போது இதயத்தை திறந்து கேட்போமா…

கேட்பது ‘தவம்…’

இரு உருவங்கள் தாண்டி… உடல்கள் தாண்டி… ஆன்மாவாய் இருந்து ஆன்மாவை…

இங்கு சொல்வதற்கு நிறையபேர் இருக்கிறார்கள்
சொல்லப்போனால் காத்திருக்கிறார்கள் - ஆனால்
கேட்பதற்குத் தான் யாருமில்லை…

‘தவம்’ செய்யும் போது சிலை போல எப்போதும் இருந்து விடாதீர்கள்…

நம்பிக்கை கொடுங்கள்,
சிலவேளைகளில் நிதானத்தைக் கற்றுக் கொடுங்கள்,
அழுவதற்கும் சிரிப்பதற்கும் அனுமதி கொடுங்கள்,
கோபங்களையும் விரக்திகளையும் வெளிக்காட்ட விடுங்கள்,
ஏக்கங்களையும் எதிர்பார்ப்புகளையும் எடுத்துரைக்க இடம் கொடுங்கள்,
சிலநேரங்களில் வேகம் குறைந்து விட்டால் விவேகம் பிறக்கும் அதற்குரிய நேரத்தையும் கொடுங்கள்…

கைகொடுங்கள்… சாய்ந்து கொள்ள தோள் கொடுங்கள்… சிலவேளைகளில் தாயாக மடி கொடுங்கள்…

அருகில் இல்லை என்றாலும் வார்த்தைகளால் அரவணையுங்கள்…; ‘ம்…’ என்ற ஒற்றை எழுத்தின் ஒலி போதும் உனை நான் செவி கொடுத்துக் கேட்கிறேன் என்று உணரச்செய்ய…

அனைத்தையும் ஆமோதிக்கத் தேவையில்லை ஆனால் எதையும் அலட்சியம் செய்து விடாதீர்கள்…
வெறுப்பையும் கோபத்தையும் விட புறக்கணிப்பும் அலட்சியமும் அதிக வலியைக் கொடுக்கும்…

உணர்வுகளின் ஆழத்தைப் புரிந்து கொள்ளுங்கள், வலிகளின் உச்சத்தை உணர்ந்து கொள்ளுங்கள்,
மகிழ்ச்சியைப் பகிரும் போது மகிழ்ந்திருங்கள்…

இன்று சொல்பவர்கள் என்றும் சொல்வார்கள் அல்லது சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்காமல் கேளுங்கள்…

நம்பிக்கை கொடுங்கள்…
இவர்களிடம் மனம் விட்டுப் பேசினால் ‘எடை’ போடமாட்டார்கள் என்று…

நம்பிக்கை கொடுங்கள்…
பேசுவதை நிறுத்தினாலும் பேசிய வார்த்தைகள் எதுவும் உங்களைத் தாண்டி இன்னொருவரிடம் செல்லாது என்று….

நம்பிக்கை கொடுங்கள்…
‘அனைத்தையும் அவசரப்பட்டு சொல்லிவிட்டோமோ…?’ என்று அவர்கள் சிந்திக்காதவாறு...

உறுதியாக இருங்கள்…!
சொல்பவர்கள் உங்களுக்கு மட்டும் தான் சொல்கிறார்கள் அதை ஊருக்கே சொல்லிவிடாதீர்கள்… கேட்டவை உங்களுடன் மட்டும் போகட்டும்…

செய்த தவறுகளைச் சொன்னால் குற்றப்படுத்தாதீர்கள்… தவறுகள் செய்யாத மனிதர்கள் இல்லை தவறுகள் தாண்டி வாழத் தைரியம் கொடுங்கள்…

யாரிடமாவது சொல்லமாட்டோமா என்று ஏங்குபவர்களுக்கு எதைச் சொல்வதென்று தெரியாமல் போகலாம் அல்லது எப்படி சொல்வதென்று புரியாமல் போகலாம்… ஆதங்கத்தில் அனைத்தையும் கொட்டித்தீர்த்து விடலாம்… அடைக்கலம் கொடுங்கள்… மதிப்பளியுங்கள்… அவர்களின் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதை உணரச் செய்யுங்கள்… அனைத்தையும் தாண்டி மனதிற்குள் எடை போடாதீர்கள்…

மறுமுறை காணும் போது உங்கள் பார்வையைத் தெளிவாக வையுங்கள்… உங்களின் பார்வையாலோ,வார்த்தைகளாலோ கூனிக்குறுக வைத்து விடாதீர்கள்…

சில வேளைகளில் சிலைபோலும் இருங்கள் அடுத்தவரைப் பற்றி ஒருவர் சொல்லும் போது அதனால் அந்த அடுத்தவரைப் பற்றிய உங்கள் பார்வையோ, புரிதலோ மாறாதவாறு…
அதனால் எப்போதும் சிலை போல் மட்டும் இருந்து கேட்காதீர்கள்… அப்படியென்றால் அவர்கள் கடவுள் சிலை முன் சொல்லித்தீர்த்திருப்பார்கள்… அவர்களுக்குத் தேவை ‘உடனடி’ ஆறுதலும், ஆறுதலாய் சில வார்த்தைகளும்… அவற்றைக் கொடுக்கத் தயங்காதீர்கள்….
அதிகம் வேண்டாம் - ‘விடு எது வந்தாலும் பார்த்துக்கலாம், உன்னோடு நானிருக்கிறேன்…’ என்று கூறுங்கள்… எதை இழந்தவனையும் மீண்டும் எழச் செய்து விடும் இவ்வார்த்தைகள்… அதுபோதும் அவர்களுக்கும்…

கேட்பவற்றில் பலவற்றை மறந்துவிடுங்கள்;
ஏனென்றால் அவை சொல்பவர்களின் உணர்ச்சிகளின் போராட்டம்… உறவுகளின் போராட்டம்… போராட்டங்கள் ஓய்ந்து போகலாம்… அவர்கள் ஏங்கியவை கிடைத்து விடலாம்… அவர்களும் மாறிவிடலாம்… அவர்கள் மீண்டும் மகிழ்ச்சியாக வாழலாம்… அவர்களின் மகிழ்ச்சியில் நீங்கள் ஆனந்தம் அடையுங்கள்…
அவர்கள் சொன்ன வார்த்தைகளாலேயே அவர்களைக் குற்றவாளி ஆக்கிவிடாதீர்கள்…. அவர்கள் ‘மறந்தவற்றை’ நீங்கள் ‘சுமந்து’ கொண்டு திரியாதீர்கள்…

சிலநேரங்களில் தட்டிக்கொடுங்கள், தட்டிக் கேளுங்கள், மறுப்புத் தெரிவியுங்கள், கேட்டால் ஆலோசைனைகளைச் சொல்லுங்கள், தேவைப்பட்டால் அனுபவங்களை அளவோடு பகிருங்கள், ஆறுதல் அளியுங்கள், நம்பிக்கையில் நம்பிக்கை கொள்ளச் செய்யுங்கள்…

இன்னும் அதிகமாய் உறுதியாய் இருப்போம்…

சொன்னவர்கள் எம்முடன் பேசாமல் போனாலும் அவர்கள் சொன்னது எதுவும் எமை விட்டு வெளியில் போகாமல் இருக்குமென்று…

இன்னும் அதிகமாய் உறுதியாய் இருப்போம்…
கேட்கும் நாம் ‘குப்பைத் தொட்டியாய்’ அல்லாமல் ‘நதியாய்’ இருப்போம் என்று…

ஆம் கேட்போமா ‘தவம்’ போல்…
இங்கே சொல்வதற்கு நிறையப்பேர் காத்திருக்கிறார்கள்….

கேட்பது தவமென்றால்;
சொல்பவர்களுக்கு நாம் வரமாவோம்…❤️

2 years ago | [YT] | 7

Aviraa World

‘அனுபவம்’
பல வேளைகளில் தவறான முடிவுகளையும்
சில சமயங்களில் சரியான முடிவுகளையும்
எடுக்க விடாமல் தடுத்து விடுகிறது… ☺️

2 years ago | [YT] | 8

Aviraa World

‘சுவாசிப்பதற்கு’ முன்பே நேசிக்கத் தொடங்கிய உறவு;
சுவாசத்தை நிறுத்திய பின்பும் தொடர்கிறது…



( இது கொரோனா காலத்தில் நடந்த சம்பவம்… மகனிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டு தனிமைப்படுத்தப்படுகிறார்… சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்… அருகில் செல்ல முடியாத, அருகில் இருந்து கவனிக்க முடியாத சூழ்நிலை தாய்க்கு… அதனால் தினமும் தன் மகன் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு வெளியில் நின்று மகனுடன் குறுஞ்செய்தியில் உரையாடுவார்… ஆனால் துரதிர்ஷ்ட வசமாக சிகிச்சை பலனின்றி மகன் இறந்து விடுகிறார்… ஆனால் அந்த தாயால் தன் மகனின் இறப்பை ஏற்க முடியவில்லை… மகன் இறந்த பின்பும் தினமும் அந்த மருத்துவமனையின் வெளியில் நின்று மகனுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதை தொடர்கிறார்… இது பார்ப்பவர்களின் மனதை நொறுங்கச் செய்கிறது… இந்த சம்பவத்தை செய்தியில் பார்த்த போது எழுதியது…

ஆம் தாய்(மை)… காத்திருக்கிறது…

எங்கோ மட்டுமல்ல கண்ணெதிரிலும்…
இறப்பை ஏற்க முடியாமலும்… தொலைந்து போனவனின் தொடர்பு வந்துவிடாதா என்ற ஏக்கத்தை சுமந்து கொண்டும்…
சில ‘உறுதிகளுக்கு’ முன் அத்தனையும் உடைந்து விடுகின்றன… காலம் காத்திருப்பதில்லை தான்… ஆனால் சில காத்திருப்புகளை காலத்தாலும் தடுத்துவிட முடிவதில்லை… )

2 years ago | [YT] | 7

Aviraa World

எதிர்பார்ப்பில்லாத அன்பே உயர்ந்ததென்றெண்ணி வந்தேன்…;

உணர்கின்றேன் உன்னைக் ‘காணாத’ கணம் ஒவ்வொன்றிலும் எவ்வளவு ‘எதிர்பார்க்கின்றேன்’ உன்னை என்று…

உன்னை எதிர்பார்க்குந் தோறும் அறிகின்றேன்
அன்பின் ஆழம் எதுவென்று…

என் சொல்வேன் (?)
அன்பின் ‘எதிர்பார்ப்பு’ அன்பென்றால்…? ❤️

2 years ago | [YT] | 10

Aviraa World

நீ சொல்வாய் என நானும்
நான் சொல்வேன் என நீயும்
சொல்லாமல் போகும் வார்த்தையில்
மௌனமாய் மரணிக்கிறது
நம் காதல்…❤️

3 years ago | [YT] | 9

Aviraa World

பொதுவாக நான் திரைப்படங்களோ, தொலைக்காட்சியோ பார்ப்பதில்லை…
நான் பார்த்த மிகக் குறைந்தளவு திரைப்படங்களில் ‘ABCD’ என்ற படமும் ஒன்று… ஷ்யாம், ஸ்னேகா நடித்த படம்… எப்படி இந்தப் படத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்ததென்று எனக்கே தெரியவில்லை… மிகவும் மாறுபட்ட கதையம்சம் கொண்ட திரைப்படம்…

இந்தப் படத்தின் பெயரே மிகவும் வித்தியாசமானதாக இருக்கும். இதில் வரும் முக்கிய கதாபாத்திரங்களின் பெயர்களின் முதல் எழுத்துக்களையே படத்தின் பெயராக வைத்திருக்கிறார்கள்… அதே போல் பாடல் வரிகளும்… இசையும்… இதயத்தை ஒவ்வொரு முறையும் ஏதோ வலியோடு சுகமாக வருடிச் செல்லும்…

உணர்வுகளின் நூலிழையில் நடை போட்டுச் சென்றிருக்கும் இப்படம்…
கொடூரத்தின் உச்சத்தையும் அரவணைப்பின் ஆழத்தையும் ஒரு பெண் காண்கிறாள்…
‘புதைக்கப்பட்ட’ விதையாக ஒரு பெண்ணின் உணர்வுகளையும், விதையிலிருந்து துளிர்விடும் முதல் தளிரின் போராட்டத்தையும், வேதனையையும், ஆனந்தத்தையும் மிக அழகாக சொல்லியிருக்கும் இக் ‘காவியம்’.
அதே போல் வெவ்வேறு சூழ்நிலைகளில் வளரும், வாழும் இரு பெண்களைப் பற்றியும்…

இப்படம் உணர்ச்சிகளின் கூடாரமாக எங்கும் தோன்றவில்லை… உணர்வுகளின் உன்னதத்தைத் திரையிட்டுக் காட்டியிருக்கும்…

ஷ்யாமின் கதாபாத்திரம் ஒரு ஆணிற்குள் இருக்கும் தாய்மையை அழகாக காட்டியிருக்கும்… ஆம் எதையுமே முழுமையாக ஏற்றுக் கொள்வது தாய்மையே…

நான் பெண்ணியம் பேசுபவள் அல்ல… மனிதம் போற்றுபவள்… ஆனால் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும், எதிர்பார்ப்புகளையும் இத் திரைப்படத்தில் இயல்பாகக் காட்டியிருப்பார்கள்… அதே நேரத்தில் ஷ்யாமின் கதாபாத்திரம் ஆண் சமூகத்தின் மீதான நம்பிக்கையை தளரவிடாமல் கட்டிக் காத்திருக்கும்…

‘மதிக்கப்பட வேண்டியவை உணர்வுகள்; புரிந்து கொள்ளப்பட வேண்டியவை மௌனங்கள்…’ இவை இரண்டுமே மிக அழகாக கையாளப்பட்டிருக்கும் இத் திரைப்படத்தில்…

ஒரு பெண்ணின் துணிவான முடிவையும், ஒரு ஆணின் அன்பான முடிவையும் விமர்சனங்கள் எதுவுமின்றி அப்படியே ஏற்றுக்கொள்ள வைத்துவிடுகிறது இந்தத் திரைப்படம்…

திரைவிமர்சனங்கள் எழுதியும் பழக்கமில்லை… பார்த்தும் பழக்கமில்லை… நான் எழுத வந்தது உண்மையில் திரைவிமர்சனமும் அல்ல… உணர்வுகளின் புரிதல்களின் அழகை சொல்ல வந்தேன்… ❤️

3 years ago | [YT] | 10

Aviraa World

அடுத்தவரை ஏமாற்றத் தெரியாத போதெல்லாம்
‘பிழைக்கத் தெரியாதவர்களாகி’ விடுகிறோம்…

இன்னொரு உயிரின் வலி உணர்ந்தால்
‘வாழத் தெரியாதவர்களாகி’ விடுகிறோம்…

பிறரைப் பற்றி சிந்தித்தால்
‘ஏளனமாய்த்’ தெரிகின்றோம்…

உயிர்களைத் தேவைக்கு மட்டும் பயன்படுத்த தெரியாததால்
‘முட்டாள்’ என்று முடிவுகட்டப்படுகிறோம்…

எதுவும் தெரியாமல் அல்ல புரிந்தாலும்
எவரையும் புண்படுத்த விரும்பாததால் புன்னகையுடன் நகர்கிறது வாழ்க்கை…

நமக்கு வாழத் தெரியாததால் அல்ல
நமக்காக மட்டும் வாழத் தெரியாததால் தான் இன்று நமக்கென்று யாருமின்றி தனித்திருக்கிறோம்…

அடுத்தவரின் சுயநலங்களிற்காக எம் சுயத்தை இழந்து விட முடிவதில்லையே…

என்ன செய்வது…
மனிதம் தொலைத்த மனித அகராதியில் சுயநலம் ஒன்றே உயர்வாகக் கொண்டாடப்படுகிறது…

3 years ago | [YT] | 13